சனி, 21 மார்ச், 2015

கண்களை பாதுகாக்கும் காய்கறிகள்

கண்களை பாதுகாக்கும் காய்கறிகள்
உலகை ரசிப்பது கண்கள். மனிதனின் வளர்ச்சியில் முக்கிய பங்கு கண்களுக்குஉள்ளது. இந்த கண்களை பாதுகாப்பது மிக அவசியம். கண்களில் ஏதாவது சிறிய குறைபாடு என்றாலும் நாமே சிகிச்சை அளிக்காமல், உடனடியாக சிறந்த கண் மருத்துவர்களிடம் சென்று அவர்கள் தரும் ஆலோசனையின்படி சிகிச்சை பெறுவது அவசியம். கண் எரிச்சல், கண் வலி போன்றவற்றுக்கு பெரும்பாலும் மருந்து கடைகளில் மருந்து வாங்கி பயன்படுத்துவதை கண்டிப்பாக தவிர்ப்பது நல்லது.
கண்களை சுற்றி மொத்தம் 12 தசைகள் உள்ளன. இதில் ஏதாவது ஒன்றில் பாதிப்பு ஏற்பட்டால் கூட கண் நோய் வருகிறது. இக்காரணத்தினால் கண்கள் கனமாக தோன்றுவதுடன் விரைவில் சோர்வடையும். பார்வை மங்குவதற்கும் வாய்ப்புள்ளது. அதிக அழுத்தம் காரணமாக கண்கள் பெரிதும் பாதிக்கும். அதிலும் கண்ணாடி போட்டுக் கொண்டே கண்களுக்கு அதிக அழுத்தம் கொடுத்தால், கண்ணாடியில் உள்ள பவரின் அளவு அதிகரிக்கும். படுத்துக்கொண்டு படிக்கக்கூடாது. ஏனெனில் படுத்துக்கொண்டு படிப்பதால், கண்களில் அதிக அழுத்தம் ஏற்படுகிறது. இதனால் கண்களில் சில சமயங்களில் வலி கூட ஏற்படும்.
பயணத்தின் போது படித்தால் கண்கள் மிகவும் பாதிக்கப்படும். அந்த நேரம் நம் பார்வை ஒரே சீரான பார்வையில் இருக்காது, ஒருவித அசைவு ஏற்பட்டுக்கொண்டே இருக்கும். அப்போது கண்களுக்கு மிகுந்த பாதிப்பு ஏற்படும். வெளியே அதிகமான சூரிய வெளிச்சம் இருக்கும்போது, கண்களை சரியாக திறக்காமல், லேசாக திறந்து கொண்டு செல்வோம். ஏனெனில் சூரியனிடமிருந்து வரும் புற ஊதாக்கதிர்கள், கண்களை பாதிப்பதோடு, வறட்சியை ஏற்படுத்தி, பார்வை கோளாறை உண்டாக்கும். ஆகவே வெளியே வெயிலில் செல்லும்போது, கூலிங் க்ளாஸ் அணிந்து செல்லலாம்.
இரவு நேரத்தில் வாகனத்தில் நீண்ட தூரப்பயணம் மேற்கொண்டால், மறுநாள் காலையில் கண்கள் சிவப்பு நிறத்தில் இருக்கும். ஏனென்றால், இரவில் வண்டியை ஓட்டும்போது, எதிரில் வரும் வாகனத்திலிருந்து வரும் ஒளியானது, கண்களில் நேராக படுவதால் இவ்வாறு இருக்கும். டிவியும், கம்ப்யூட்டரை போன்றுதான் கண்களுக்கு பிரச்சனையை தரும். எப்போதும் டிவியை மிகவும் அருகில் உட்கார்ந்து பார்த்தால், கண்கள் களைப்படைந்து விடும். இதனால் தலைவலியும் ஏற்படும்.
தையல் இயந்திரத்தில் தைக்கும்போது, ஊசியில் நூலை கோர்ப்பதற்கு முழு கவனத்துடன் அந்த ஊசியில் உள்ள ஓட்டையை உற்று பார்க்க வேண்டியுள்ளது. இது கண்களுக்கு மிகுந்த அழுத்தம் தரும். இதனால் கண்களில் வலி ஏற்படும்.பைக்கில் செல்லும்போது கண்ணாடி இல்லாமல் செல்லுதல், கணினி திரையை தொடர்ந்து பார்த்துக் கொண்டிருத்தல் மூலம் கண்நோய் மற்றும் கண்ணில் நீர்வடியும்.
இதில் இரண்டு வகை உண்டு.
அவை: கண் உறுத்தல், புண், அடிபடுதல், மனச்சோர்வு.
மற்றொரு வகை: எபிபோரா. இவை கண்ணீர் வெளியேறும் பாதைகளில் உள்ள அடைப்புகளினால் ஏற்படும்.
ஓவியம், எம்பிராய்டரி போன்ற நுட்பமான வேலை செய்பவர்களுக்கு அஸ்தனோபியா என்ற தொந்தரவு வரும். இதன் மூலம் கண்கள் சோர்வடையும்.தொற்று நோய்கள் வைரஸ் மற்றும் பாக்டீரியா தொற்றுகளும் கூட கண் பாதிப்பை ஏற்படுத்தும். கோடை காலத்தில் இந்த தொற்றுகளின் வீரியம் அதிகமாகவே இருக்கும். கண் நோய் ஏற்பட்டால் தலைவலி உண்டாகும். இவை ஒருவித வைரஸ் கிருமியால் ஏற்படும். தலைவலி, பார்வைக்குறைவு ஏற்பட்டால் உடனே கண் மருத்துவரை அணுகி உரிய சிகிச்சை பெற வேண்டும்.
காய்கறிகள்
கண்களைப் பாதுகாக்க ஊட்டச்சத்து மிகவும் அவசியம். காய்கறிகளில் வைட்டமின் ஏ மற்றும் வைட்டமின் சி, இ, இரும்பு மற்றும் கால்சியம் சத்துகள் உள்ள உணவுப்பொருட்களை அதிகமாக சாப்பிட வேண்டும். இவை கண்களை பாதுகாக்கும். வைட்டமின் ‘ஏ‘ யில் கண்ணையும், மூளையையும் இணைக்கும் முக்கியச்சத்து அடங்கியுள்ளது. கண் விழித்திரையிலுள்ள ரோடோஸ்பின் என்ற புரதத்தில் வைட்டமின் ஏ உள்ளது. வைட்டமின் ‘ஏ‘ சத்து பற்றாக்குறையால் தோன்றும் அறிகுறியே மாலைக்கண் நோய். கேரட்டில் வைட்டமின் ஏ உள்ளதால் உணவில் அதிகளவு சேர்த்துக்கொள்ளலாம்.
வைட்டமின் ‘ஏ‘வாக நம் உடலில் மாற்றம் அடையும் பீட்டா கரோடின் உள்ளது. அகத்திக் கீரை, பசலைக் கீரை, முருங்கை, பொன்னாங்கண்ணி, முளைக்கீரை, அரைக்கீரை, வெந்தயக் கீரை ஆகிய கீரைகளில் இரும்பு, போலிக் ஆசிட் மற்றும் வைட்டமின் பி12 ஆகிய சத்துக்கள் அடங் கியிருப்பதால் இவற்றை உணவில் அதிகம் சேர்த்துக் கொள்வது நல்லது. பச்சைக் காய்கறிகளுடன் சாலட் மற்றும் எலுமிச்சை சேர்த்துக்கொள்வதன் மூலம் பார்வையை கூர்மையாக்கவும் உதவும். அலுவலகம் செல்லும்போது கேரட், பழங்கள், வெள்ளரிக்காய் ஆகியவற்றை நறுக்கி எடுத்துச் சென்று இடைவேளை நேரங்களில் சாப்பிட கண்களுக்கு குளுமை பரவும். புத்துணர்ச்சி பெறலாம்.
கண்களை பாதுகாக்க
கண் கூசும் வெளிச்சத்திலும், மங்கலான வெளிச்சத்திலும், பொருட்களை உற்று பார்க்கக்கூடாது. கண்ணில் நீர் வடிந்தால், கண்களை கசக்கக் கூடாது. கண் அழகு சாதனப் பொருட்கள் பயன்படுத்துவதை தவிர்க்கவும். தலையணை உறையை தினமும் மாற்றவும்.
தூரத்தில் இருக்கும் பொருட்களை அதிக நேரம் உற்றுப்பார்க்க கூடாது. அடிக்கடி கண் சிமிட்டுவது நல்லது. அதிகமாக வேலை செய்யும்போது கண்ணில் அழர்ச்சி ஏற்பட்டாலோ, வலி ஏற்பட்டாலோ செய்யும் வேலையை நிறுத்தி விட வேண்டும்.
தூசி, புகை, அதிக சூரிய வெளிச்சம், அடர் காற்று ஆகியவற்றிலிருந்து கண்ணைப் பாதுகாப்பது அவசியம். நாளொன்றுக்கு 10 முறை கண்ணை மேல், கீழ், பக்கவாட்டுகளில் அசைத்து, பயிற்சி செய்து வர கண் தெளிவாக இருக்கும்.
குடல் சுத்தமாக இருந்தால், கண் பார்வையும் தெளிவாக இருக்கும். படபடப்பு, மன உளைச்சல், சோகம், கோபம், கவலை ஆகியவற்றை தவிர்க்க வேண்டும். இதன் மூலம் கண்களை பாதுகாக்கலாம்.